ஊட்டியான சென்னை.. மாநகர், புறநகரில் பரவலாக மழை.. ஆஃப் மோடில் ஏசி, ஃபேன்!
சென்னை: கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பரவலாக மழை
இன்றைய தினம் சென்னை மாநகர்ப் பகுதிகளான சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், கோயம்பேடு, எழும்பூர், புரசை, பாரிமுனை, ராயபுரம், அண்ணா நகர், அம்பத்தூர், பாடி, கீழ்ப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இந்திய வானிலை மையம்
சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் அலுவலகம் செல்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காரைக்கால்
மேலும் புதுவை, காரைக்கால், ஆந்திரம் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அது போல் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், நங்கநல்லூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், வண்டலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தண்ணீர்
ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. காலையில் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் மழை நீரில் நீந்தி சென்றனர். சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications