சென்னையில் பதறவைக்கும் சம்பவம்: சித்தி சித்ரவதையால் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!
சென்னை: சென்னையில் தனது தந்தையின் இரண்டாவது மனைவியால் (மாற்றாந்தாய்) தொடர்ந்து வீட்டு வேலை செய்ய வைத்து சித்ரவதை செய்யப்பட்டதால் விரக்தியடைந்த 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி, மேட்டுப்பாளையம், அருந்ததி நகர், எலிகன் தெருவைச் சேர்ந்தவர் அமர்நாத் (45). இவரது மனைவி சங்கீதா. இந்தத் தம்பதிக்கு பிரதிஷா (21), நந்தினி (17) என இரு மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்த இரு மகள்களில் பிரதிஷா தனது பெரியம்மாவுடனும், நந்தினி தனது தந்தை அமர்நாத்துடனும் வசித்து வந்தனர். இந்த நிலையில், அமர்நாத், உஷா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நந்தினி மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நந்தினியை வீட்டு வேலை செய்யும்படி உஷா தொடர்ந்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்தும் தந்தை அமர்நாத் கண்டும் காணாமல் இருந்ததாகத் தெரிகிறது. தாயும் இல்லாத நிலையில், தனக்குச் சித்தி செய்யும் கொடுமைகளைத் தந்தையும் கண்டிக்கவில்லையே என்ற மன வேதனை நந்தினிக்கு ஏற்பட்டதாம்.
வீட்டில் துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது என அனைத்து வேலைகளையும் நந்தினிதான் செய்து வந்துள்ளார். ஒரு நாள் துணி துவைக்காவிட்டாலும்கூட, தனது தோழிகளிடம் "துணி துவைக்கவில்லை, சித்தி என்ன சொல்லப் போகிறாரோ" என்று கவலையுடன் கூறிக்கொண்டே இருப்பாராம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 3, 2025) வீட்டில் தனியாக இருந்த நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நந்தினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், நந்தினியை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது சித்தி உஷா மற்றும் தந்தை அமர்நாத் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றினால், அதைத் தடுக்கும் வகையில் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 - 2464000 (24/7) அல்லது மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24/7) ஆகிய எண்களுக்குத் தொடர்புகொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications