உங்களை டார்ச்சர் செய்தார்களா? என நீதிபதி கேட்டதுமே! ஜாபர் சாதிக் சொன்ன பதில்! புழலில் அடைத்த போலீஸ்
சென்னை: சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத் துறை விசாரணை நிறைவடைந்த நிலையில் அவரை புழல் சிறையில் அடைக்க முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து, ஜூன் 26ம் தேதி கைது செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்-கை நான்கு நாட்கள் அமலாக்கத்துறை காவல் வழங்கி கடந்த 19ம் தேதி உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை காவல் முடிந்து இன்று ஜாபர் சாதிக், சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை காவலில் துன்புறுத்தப்பட்டீர்களா? என ஜாபர் சாதிக்கிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு இல்லை என ஜாபர் சாதிக் பதிலளித்தார்.
இதனையடுத்து, ஜூலை 29ம் தேதி வரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஜாபர் சாதிக் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications