விடுதலை செய்ய கோரி நளினியின் மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்துள்ளதாகக் கூறி, தன்னை விடுதலை செய்ய கோரி ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு ஜனவரி 7 ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு புதிய மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கடந்த 28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000 மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு, ஜனவரி 7 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவி்ட்டது.












Click it and Unblock the Notifications