அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான இரு வழக்குகளும் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீதான இரு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.சண்முகம் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரிலும், திமுக பிரமுகர் அளித்த புகாரிலும், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகவும், கொரோனா விதிகளை மீறியதாகவும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்றால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டுமெனவும்,
திமுக நிர்வாகியால் புகார் அளித்தது தவறு என சி.வி.சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில், அனுமதியின்றி போரட்டம் நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்கு பேர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சரியான பிரிவுகள் சேர்க்கப்படவில்லை எனவும், போராட்டம் நடந்த காலத்தில் கொரோனா விதிகள் அமலில் இல்லாத போது, அந்த விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. எட்டு மாதங்களுக்கு பின் திமுக பிரமுகர் அளித்த புகாரில் இரண்டாவது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது. முதல் தகவல் அறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, முன்னாள் அமைசார் சி.வி.சண்முகம் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications