ஊர்க்காவல் படையினருக்கான ஊதிய உயர்வு.. தமிழக அரசு மீது நம்பிக்கை.. பாஜக வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
சென்னை: ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
தமிழக காவல்துறையினருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட ஊர் காவல் படையினருக்கு நாளொன்றுக்கு 560 ரூபாய் ஊதியத்தில் ஐந்து நாட்களை மட்டுமே பணி நாட்களாக நிர்ணயித்து 2007ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் ஊர்காவல் படையினரின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, பணி நாட்களை மட்டும் 10 நாட்களாக அதிகரித்து, 2019-ம் பிப்ரவரி 19ஆம் தேதி உள்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
4 மணி நேரம் வரை பணியில் இருப்பவர்களுக்கு 280 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்றும், 4 முதல் 8 மணி நேரம் வரை பணியில் இருந்தால் மட்டுமே 560 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளதையும் மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அண்ணாமலை தரப்பில் ஒவ்வொரு மாதமும் 5600 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு கிடைப்பதாகவும், 17600 ஊர் காவல் படையினரில் 76 சதவீதத்தினர் பட்டியலின பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்ட்பட்டது.
மேலும் புதுச்சேரி, ஆந்திரா போல ஊர்க்காவல் படையினருக்கு பணி நாட்களையோ அல்லது ஊதியத்தையோ உயர்த்த வேண்டும் என வலியுறுத்தபட்டது. தமிழக அரசு தரப்பில் 10 நாட்கள் என்பது குறைந்தபட்ச பணிநாட்களாக நிர்ணயிக்கபட்டதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் நாட்கள் பணி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஊர்க்காவல் படையினரை பணிவரன் முறைப்படுத்த முடியாது எனவும், தாமாக முன்வந்து சேவை செயவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ஊதியம் வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், வேலைவாய்ப்பு இல்லாமல் பலர் ஊர்காவல் படையில் சேர்ந்து வருவாய் ஈட்டும் நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
10 நாட்கள் பணி வழங்கபடுவதாக அரசு கூறினாலும், பல ஊர் காவல் படையினர் மாதம் முழுதும் பணியில் அமர்த்தப்படுவதாக தெரிவித்ததுடன், இதை முறைப்படுத்த வேண்டும் என்வும், யாருக்கும் சாதகமாக செயல்படாமல் தேர்வு மற்றும் பணிக்கு உரிய விதிகளை வகுக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.
ஊர்காவல் படையில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சமாக நிர்ணயிக்கபட்ட 5600 ரூபாய் ஊதியம் கிடைக்கும் வகையில் பணி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
ஊர்க்காவல் படையினருக்கான ஊதியத்தை அரசு உயர்த்தும் என நம்பிக்கை தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, காவல்துறையினரின் ஊதியம் மாற்றியமைக்கப்படும் எனவும் நம்புவதாக தெரிவித்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்தனர்.