சைலேந்திரபாபுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு.. போலீசுக்கு ரூ.2000 அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்
சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்த காவலரின் வழக்கை 2000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட அருணாச்சலம் என்பவர் 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து 2003ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக கருதி பணி மூப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு அருணாச்சலம் மனு அளித்தார்.

இந்த மனுவை பரிசீலிக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அருணாச்சலத்தின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அருணாச்சலம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஜெ. ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மனுதாரரின் கோரிக்கைய டிஜிபி பரிசீலித்ததாகவும், பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்காமல் 11 ஆண்டுகள் கழித்து விண்ணப்பித்த காரணத்தால், மனுதாரர் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
இந்த தகவலை மறைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தவறான மனுவை தாக்கல் செய்ததற்காக இரண்டாம் நிலை காவலரான மனுதாரர் அருணாச்சலத்திற்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து, டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் மனுதாரரான இரண்டாம் நிலை காவலர் அருணாச்சல் செலுத்தும் ரூ.2000 அபராத தொகையை தமிழ்நாடு காவல்துறை மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications