சீரியல் கொலை வழக்கு குற்றவாளி ஆட்டோ சங்கரின் சகோதரர் ஆட்டோ மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு- ஹைகோர்ட்
சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள ஆட்டோ சங்கரின் சகோதரர் மோகனுக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீரியல் கொலை வழக்கில் ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்ட போது அவருடன் சேர்த்து அவரது சகோதரர் ஆட்டோ மோகனும் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து 1996ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை கடந்த 2008ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், 35 ஆண்டுகளாக சிறையில் மோகனை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி துளசி தேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
35 ஆண்டுகளாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டும், நன்னடத்தை, முதுமை மற்றும் உடல் நிலை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மோகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இடைக்காலமாக அவருக்கு விடுப்பு வழங்க வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனோகரன் ஆஜராகி, மூன்று மாதங்கள் விடுப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், மூன்று மாதங்களுக்கு பதிலாக ஒரு மாதம் விடுப்பு வழங்கலாம் என கூறினார்.
இதனையடுத்து, வாரம் ஒருமுறை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து ஆட்டோ மோகனுக்கு ஒருமாத காலம் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications