கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகன் நியமனத்திற்கு இடைக்காலத் தடை
கோயில்களின் ஆகமங்களை கண்டறியும் குழுவின் உறுப்பினர் சத்தியவேல் முருகனின் நியமனத்திற்கு ஹைகோர்ட் இடைக்கால தடை
சென்னை: கோவில்களின் ஆகமங்களை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவில், அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவில்களில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்பதால், எந்தெந்த கோவில்கள் எந்தெந்த ஆகமங்களை பின்பற்றுகின்றன என்பதை அடையாளம் காண உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஐந்து பேர் குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இக்குழுவில், குழு தலைவர் ஒப்புதலுடன் இரு உறுப்பினர்களை அரசு நியமிக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கோவில்களின் ஆகமங்களை அடையாளம் காண உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவில், அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சத்தியவேல் முருகனை நியமித்து பிப்ரவரி 8ம் தேதி அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு
இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஓய்வுபெற்ற நீதிபதியுடன் கலந்தாலோசித்து குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும், சத்தியவேல் முருகன் நியமனம் தொடர்பாக குழு தலைவரிடம் ஆலோசனை ஏதும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகமத்தை பற்றி எதுவும் தெரியாதவர்
ஆகமத்தைப் பற்றி எதுவும் தெரியாத சத்தியவேல் முருகன், ஆகமங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், தகுதியில்லாத அவரை, கோவில்களின் ஆகமம் கண்டறியும் குழுவில் நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

விசாரணை
இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், சத்தியவேல் முருகனை நியமிக்க கூடாது எனக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவர் ஆகம குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகமங்களுக்கு எதிராக அவர் பேசியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

வாதம்
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவில் ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவில் சத்தியவேல் முருகனை நியமித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications