ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அருகே எவ்வளவு நேரம்தான் மனைவி அழுதுகிட்டே இருப்பாங்க? நீதிபதி வேதனை
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் உடல் முன் அமர்ந்து அவரது மனைவி அழுது கொண்டிருக்க முடியாது, அவர் மீண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாத் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே ஆதரவாளர்களுடன் இருந்த போது அவரை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வளைத்த கும்பல், அரிவாளால் வெட்டி சாய்த்தது. இதில் நிலை குலைந்து ஆம்ஸ்ட்ராங் கீழே விழுந்தார்.

இதையடுத்து அந்த கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து அவருடைய உடலை ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என குடும்பத்தினர் கேட்ட நிலையில் அதற்கு போலீஸார் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலேயே போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் இரவு ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்ட்ரல் முதல் பெரம்பூர் வரை அவருடைய உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவருடைய உடல் பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என அவருடைய மனைவி பொற்கொடி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பவானி சுப்புராயன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் , பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம் குறுகிய பகுதி, குடியிருப்புகள் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் ஆம்ஸ்ட்ராங் உடலை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தால் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நிலம் கொடுக்க மனம் உள்ளது, ஆனால் விதிமுறையை பின்பற்ற வேண்டுமே. ஆம்ஸ்ட்ராங் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தில் மணி மண்டபம் கட்டுவார்கள். அந்த இடத்தில் வீரவணக்கம் செலுத்த அவருடைய ஆதரவாளர்கள் புறப்பட்டால் அந்த குறுகிய இடத்தில் நெரிசல் ஏற்படும் என தனது வாதத்தில் தெரிவித்தது.
அப்போது நீதிபதி கூறுகையில், வீரவணக்கம் செலுத்தும் போது இடநெருக்கடியால் உங்களுக்குத்தான் செய்ய முடியாமல் போகும். எனவே வேறு இடம் பார்த்து சொல்லுங்கள் என்று கூறி வழக்கை ஒரு மணி நேரத்திற்கு தள்ளி வைத்தார். அப்போது மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் விஜயகாந்துக்கு வழங்கியதை போல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடம் வழங்க வேண்டும் என்றார். அதற்கு தமிழக அரசு தரப்பு, விஜயகாந்தின் கல்யாண மண்டபம் 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. அங்கு குடியிருப்புகள் ஏதும் இல்லை. சாலையும் அகன்றதாக உள்ளதால் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும். அவரது உடலை நல்லடக்கம் செய்ய 200 சதுர அடி இடத்தை தர அரசு தயார். அதுவும் பெரம்பூரிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் கொடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அப்போது மனுதாரரோ, பெரம்பூரிலேயே 7500 சதுர அடியில் இடம் கொடுங்கள் என கேட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பவானி, "விஜயகாந்திற்கு கொடுத்தது போல் சலுகை கொடுக்க தயார். ஆனால் அதற்கான இடத்தை நீங்கள்தான் காட்ட வேண்டும். குடியிருப்பு இருக்கும் இடத்தில் நல்லடக்கம் செய்ய கேட்டால் எப்படி கொடுக்க முடியும். மேலும் உடலை பள்ளியிலேயே வைத்திருக்க முடியாது. நாளை பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும்.
இன்று மாலையே அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் முன்பு அமர்ந்து அவரது மனைவி எப்போதும் அழுது கொண்டிருக்க முடியாது. அவரும் இந்த துக்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும். நீதிமன்றம் எல்லையை தாண்ட முடியாது என தெரிவித்த நீதிபதி இந்த வழக்கை மதியம் 2.15 மணிக்கு ஒத்தி வைத்தார்












Click it and Unblock the Notifications