தலைமை நீதிபதி தஹில் ரமாணிக்கு ஆதரவாக சென்னையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம்
Recommended Video
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹீல் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை எதிர்த்து வழக்கறிஞர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருபவர் வி.கே. தஹீல் ரமாணி இவரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேகாலயா மாநில இடம் மாற்றம் செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதேபோல் மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.
இந்நிலையில் இந்த இடமாற்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹீல் ரமாணி , உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார். ஆனால், இந்தக் கோரிக்கையை மூத்த நீதிபதிகள் குழு அண்மையில் நிராகரித்தது.
இந்நிலையில் மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தன்னை நியமித்துள்ள கொலிஜியம் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹீல் ரமாணி பதவி விலகுவதாக குடியசுரத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார்.
அவரது கடிதம் ஏற்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹீல் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications