கள்ளக்குறிச்சி சுங்கச் சாவடியில் ஊழியர்கள் பணிநீக்கம்.. மத்திய அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை:கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு மற்றும் திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் அருகே திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில் திருச்சி டோல்கேட் நிறுவனத்திற்காக ஒப்பந்ததாரர்கள் மூலம் 230 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

அவர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தை குறித்து கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தொழிலாளர் சங்கங்கள் கலந்து கொண்ட ஊதிய பேச்சுவார்த்தைக்கு பிறகு, 60 பேரை பணி நீக்கம் செய்வது குறித்து செப்டம்பர் 5ஆம் தேதி முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலையில் 56 ஊழியர்களை பணி நீக்கம் செய்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சுங்கச்சாவடி நிறுவனம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.காரல் மார்க்ஸ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தொழில் தகராறுகள் சட்டத்தை பின்பற்றி பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட நடைமுறை சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது.
திருச்சி சுங்கச்சாவடி நிறுவனம் வழக்கறிஞர் இந்து கருணாகரன் ஆஜராகி சுங்கச்சாவடி நிறுவனம் என்பது ஒரு தொழில் நிறுவனம் இல்லை என்பதால் தொழில் தகராறுகள் சட்டத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கு குறித்து மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை, மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், திருச்சி டோல்கேட் நிறுவனம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications