பணக்காரர்களின் சொர்க்க பூமி.. ரூ730 கோடி வாடகை பாக்கி செலுத்த சென்னை ரேஸ் கிளப்பிற்கு உத்தரவு
சென்னை: சென்னை ரேஸ் கிளப் ஒரு மாதத்திற்கு ரூ 730 கோடி வாடகை பாக்கியை செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ரேஸ் கிளப்பிற்கு 1946ஆம் ஆண்டு 160 ஏக்கர் 96 சென்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ 614 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் 1970 ஆம் ஆண்டு முதல் வாடகையை உயர்த்துவது குறித்து விளக்கம் அளிக்குமாறு மாம்பலம்- கிண்டி தாசில்தார் ரேஸ் கிளப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸுக்கு ரேஸ் கிளப்பும் பதில் அளித்தது.

வாடகை உயர்த்துதல்
அதாவது 1946 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்து எதுவும் இடம்பெறவில்லையே என தெரிவித்திருந்தது. இந்த விளக்கத்தை நிராகரித்த அரசு, ரூ 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 வாடகை பாக்கி செலுத்தும்படி ரேஸ் கிளப்பிற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதி உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி ரூ 730.86 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்த ரேஸ் கிளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்த தொகையை கட்டத் தவறினால் மனுதாரரை காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றி நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

12 ஆயிரம் கோடி வாடகை பாக்கி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் குத்தகையை அரசு மறு ஆய்வு செய்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் 2004 ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட வாடகை பாக்கி 12,381 கோடி. 35 லட்சம் ரூபாயை 2 மாதங்களில் செலுத்தக் கூறி ஒரு மாதத்தில் நோட்டீஸ் அனுப்பவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை ரேஸ் கிளப் நிலம் என்பது ஒரு சில பணக்கார்களுக்காக ஒதுக்கப்பட்டது.

மக்கள் நலன்
இதில் தற்போது நடைபெறும் செயலில் எந்த பொதுநலனும் இல்லை என்ற நீதிபதி, சென்னையின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த நிலத்தை மீட்டு மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாமே என கேட்டிருந்தார். மேலும் அரசின் நிலங்களின் குத்தகையை உயர்த்துவது என்பது அரசின் கொள்கை முடிவு, அதை நியாயமற்றது என்றும் சட்டவிரோதமானது என்றும் யாரும் கூற முடியாது என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications