கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்த வழக்கில்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மறு எண்ணிக்கை நடத்தி சரிபார்த்து அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி செலவிட்டுள்ளதாகவும், தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நடைபெற்றது.
இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமாரின் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மீண்டும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று திமுக வேட்பாளர் செங்குட்டுவன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் இந்த மனு மீது உத்தரவு வழங்கிய நீதிபதி பி.டி. ஆஷா நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும், உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் இதற்கென ஒரு பதிவாளர் நியமிக்க வேண்டும் அதேபோல் தேர்தல் ஆணையமும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார் இந்த நடவடிக்கைகளை முடித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ஏன் நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications