Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேதா நிலையம்: அதிமுக மேல்முறையீட்டு மனு.. தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

Chennai HC postpones AIADMKs plea on Veda Nilayam

இந்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நினைவு இல்லம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில்
அறிவிப்பு வெளியிட்டு, ஓராண்டுக்கு பின் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், நினைவு இல்லம் அமைப்பது பொது பயன்பாடா, இல்லையா என்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க முடியும் எனவும், வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆறு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெண்கள் நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல திட்டங்களை நிறைவேற்றியதாகவும், இதை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் நினைவு இல்லம் அமைக்க கொள்கை முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மெரினாவில் 80 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் மற்றொரு நினைவு இல்லம் அமைக்க தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது எனவும், சென்னையில் ஏற்கனவே ராஜாஜி, காமராஜருக்கு இரு நினைவிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சாவிகள் ஒப்படைக்கப்படும் முன் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த மேல் முறையீடு செல்லத்தக்கதல்ல என கூற முடியாது எனவும், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் சாவிகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால் முந்தைய அரசு முடிவுகள் செல்லாது என கூற முடியாது என்றும் குறிப்பிட்டார். தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கை எதிர்கொண்ட மாநில அரசு, மேல் முறையீடு செய்யாமல், தனி நீதிபதி தீர்ப்பை ஏற்று, சாவிகள் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதான வழக்கில் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது தெரிந்தும், இடையீட்டு மனுதாரராக சேர்த்துக் கொள்ள முயற்சிக்காத அதிமுக, இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய முடியாது என்று வாதிட்டார்.

ஏற்கனவே 80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நினைவு இல்லம் அமைக்க 70 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார். ஒரு நினைவு இல்லம் போதுமானது எனவும், பொது பயன்பாடா? இல்லையா? என்பதை முடிவு செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

தீபா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், கையகப்படுத்தியதில் தீவிர நடைமுறை தவறுகள் உள்ளதாகவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய அதிமுகவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்பதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார். வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் எந்த பொது பயன்பாடும் இல்லை எனவும் அரசியல் லாபத்துக்காக கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகள் நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகிய இருவரும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல என அதிமுக மறுக்கவில்லை என்றும், தீபக், வாரிசு சான்று கோரி விண்ணப்பித்த மறுநாளே சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

நினைவு இல்லமாக மாற்ற பொது பணத்தை செலவு செய்வதற்கு பதில், மக்கள் நலனுக்கு செலவிட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு யோசனையை ஏற்றும், ஒரு நினைவிடம் உள்ள நிலையில், நினைவு இல்லம் தேவையில்லை என தனி நீதிபதி உத்தரவை ஏற்றும் மேல் முறையீடு செய்யவில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்றும், ஏற்கனவே இரு அதிமுகவினர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மீண்டும் அதே பிரச்னை தொடர்பாக அதிமுக வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+