அதிமுக கொடி, இரட்டை இலை சின்னம்.. ஓபிஎஸ் மனு மீது எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது- ஹைகோர்ட்
சென்னை: அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவு தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடந்த 18ஆம் தேதி நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா இல்லையா என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில்தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது.
42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகாரம் செய்யவில்லை. இரு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தனது மேல்முறையீட்டு மனுவில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று 4ஆவது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்த தனிநீதிபதியின் உத்தரவுக்கு எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இறுதி விசாரணைக்காக இந்த மேல்முறையீட்டு வழக்கை ஜூன் 10 -ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். இரட்டை இலை சின்னத்தை தர கோரி தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணுக எந்த தடையும் இல்லை. அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications