கலாஷேத்ரா வளாகத்தில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள மயானத்துக்கு செல்லும் போது பாதையில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில், மத்திய கலாச்சார துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தின் வழியாக மயானத்துக்கு செல்லும் பாதை அமைந்திருந்தது.
கலாஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கையை ஏற்று ஒரு ஏக்கர் 43 செண்ட் பரப்பில் அமைந்துள்ள பாதை குத்தகைக்கு வழங்கப்பட்டதுடன், மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், நிலம் ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கமளிக்க கலாஷேத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீசை எதிர்த்த வழக்கில், வளாகத்தின் தென் மேற்கு பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை மயானம் அமைக்க ஒதுக்கும்படி, கலாஷேத்ராவுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி 1990ம் ஆண்டு ஒரு ஏக்கர் 16 செண்ட் நிலம் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
அதன்பின் கலாஷேத்ராவின் பயன்பாட்டில் இருந்து வந்த ஒரு ஏக்கர் 46 செண்ட் பாதை நிலம், 2004 வரை ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் வாடகைக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
கல்வி நிறுவனம் என்பதால், இந்த பாதை நிலத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி கலாஷேத்ரா முன் வைத்த கோரிக்கையை ஏற்று, நில நிர்வாக ஆணையர், நிலத்தை வழங்க 2010ம் ஆண்டு பரிந்துரைத்தார்.
அந்த பரிந்துரை மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சென்னை மாநகராட்சி, பொது பாதையில் சாலை அமைக்கும் பணிகளை துவங்கியுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி கலாஷேத்ரா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த இடம் அரசுக்கு சொந்தமானது எனவும், மக்கள் பயன்படுத்தக் கூடிய மயானத்துக்கு செல்லக்கூடிய பாதை என்றும் இதை கலாஷேத்ராவுக்கு கொடுத்தால் மயானத்துக்கு 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கலாஷேத்ரா அறக்கட்டளையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications