தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மாஃபா பாண்டியராஜனின் மனு தள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக போடப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் மனு சென்னை ஹைகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தனது தேர்தல் வெற்றிக்கு எதிராக போடப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் மனு சென்னை ஹைகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்திற்கு பொதுத்தேர்தல் நடந்தது. இதில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் வெற்றிபெற்றார்.

திமுக வேட்பாளர் நாசர் தோல்வியை தழுவினார். வெறும் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில்தான் மாஃபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதில் முறைகேடு நடந்து இருப்பதாக திமுக வேட்பாளர் நாசர், மாஃபா பாண்டியராஜன் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் தனது வெற்றிக்கு எதிராக போடப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனக்கெதிரான குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்று கூறி சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
சென்னை ஹைகோர்ட் நீதிபதி முரளிதரன் முன்பான அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மாஃபா பாண்டியராஜனின் மனுவை ஏற்க முடியாது, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தேர்தல் புகாரில் முகாந்திரம் உள்ளது, அதனால் தேர்தல் வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
இதனால் தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மாஃபா பாண்டியராஜனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் நாசர் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications