பொதுநிதி பயன்படுத்துவதில் அலட்சியமா? அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் சொன்ன முக்கிய ‛அட்வைஸ்’
சென்னை: அரசின் பொது நிதியை கையாளும் அதிகாரிகள் அதை செலவிடும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், பொது நிதியை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா, அடையாளம்பட்டு கிராமத்தில் உள்ள பாடசாலை தெருவில் பொதுக்கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் என்பது பொதுப்பாதை மற்றும் தனியார் பட்டா நிலத்தில் அமைந்துள்ளது.

இதையடுத்து ஏற்பட்ட பிரச்சனையில் பொதுக்கழிப்பிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தை இடிக்கக் கூடாது என அந்த பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் பொதுக்கழிப்பிடத்தை இடிக்க கூடாது என உத்தரவிடக் கோரி பிரசாத் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கழிப்பிடம் கட்டப்பட்டுள்ள நிலம் பொதுப்பாதை என்பதாலும், தனியார் பட்டா நிலம் என்பதாலும், புதிய இடம் கண்டறியப்பட்டு கழிப்பிடம் கட்டப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக் கழிப்பிடங்களை பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் கட்ட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதோடு அரசு நிதியை கையாளும் அதிகாரிகள், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டுமென்றும், பொது நிதியை வீணாக்குவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. ஆனாலும் தவறுதலாக பொதுப் பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் பொதுகழிப்பிடம் கட்டிவிட்டதாக கூறமுடியாது என நீதிபதிகள் கூறினர்.
இறுதியாக ஆறு வாரங்களில் மாற்று இடத்தை கண்டறிந்து, பொது பாதையிலும், தனியார் பட்டா நிலத்திலும் கட்டப்பட்ட கழிப்பிடத்தை இடிக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர். இதன்மூலம் தற்போது உள்ள பொதுக்கழிப்பிடம் இடிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications