குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபரே வாதாடலாம்.. சுபிக்ஷா சுப்பிரமணியன் வழக்கில் ஐகோர்ட் அதிரடி!
சென்னை: குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர் தனக்கு எதிரான வழக்கை தானே வாதிட விரும்பினால் சிறையில் இருந்தவாறே வாதாட அனுமதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விஷ்வபிரியா பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுபிக்ஷா நிறுவனத்தின் இயக்குனர் சுப்ரமணியனுக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், சுபிக்ஷா சுப்ரமணியன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில், சில வழக்குகளில் வழக்கறிஞரை நியமிக்காமல் தானே வாதிட விரும்பதாகவும் அதற்கு அனுமதியளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த வழக்குகளில் அவர் சொந்தமாக வாதிட விரும்புகிறார் என்ற விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் மூன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதனிடையே, மனுதாரரின் கோரிக்கைப்படி அவராகவே வாதிட அனுமதிப்பதாக இருந்தால் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து வாதிட அனுமதிக்கப்படுவதை தவிர சிறையிலிருந்தே காணொலி மூலம் வாதிட அனுமதிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
மேலும், காணொலிக் காட்சி வாயிலாக ஆஜராகி வாதிட சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதற்கு நீதிமன்ற உத்தரவு அவசியமில்லை எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications