ஜெ. போயஸ் இல்லத்தை முதல்வரின் அரசு இல்லமாக மாற்றுங்கள்.. ஒரு பகுதியை நினைவு இல்லமாக்கலாம்-ஹைகோர்ட்
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் இரண்டாம் நிலை வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை ஹைகோர்ட் அறிவித்துள்ளது. எனவே, இவர்கள், அனுமதி இன்றி, அரசால், வேதா இல்லத்தை எடுத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடான, வேதா நிலையம் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று தமிழக அரசு 3 வருடங்கள் முன்பே அறிவித்தது. இந்த நிலையில் கடந்த வாரம், இதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புரட்சித் தலைவர் டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு இதன், தலைவராக முதல்வரும், துணைத் தலைவராக துணை முதல்வரும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

நிர்வாகி
வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி, சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் புகழேந்தி, ஜானகிராமன் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டுமெனவும், அரசு நினைவிடமாக வேதா நிலையத்தை மாற்ற ஆட்சேபித்தும் தீபக், தீபா தரப்பில் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இரண்டாம் நிலை வாரிசுகள்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த முறை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன் நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் தீபா மற்றும் தீபக்கை நியமித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் இல்லமான வேதா இல்லத்தை நினைவிடமாக அரசு அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

அறக்கட்டளை
மேலும் ஜெயலலிதாவின் ஒருபகுதி சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தை ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து அதில் நற்பணிகளை செய்ய வேண்டும் என்றும், அதே போல இந்த இல்லத்தை ஒரு பகுதியை நினைவிடம் ஆக்கவும், ஒரு பகுதியை முதல்வர் அலுவலகமாகவும் மாற்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அறிக்கை
ஜெயலலிதா இல்லமான வேதா இல்லத்தை ஒரு பகுதியை நினைவிடம் ஆக்கவும், ஒரு பகுதியை முதல்வர் அலுவலகமாக்குவது தொடர்பாக 8 வாரத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தங்களை இரண்டாம் நிலை வாரிசாக ஹைகோர்ட் அறிவித்ததை, தீபா வரவேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications