ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஹைகோர்ட் அதிரடி தடை!
சென்னை: ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், இந்த தடை காரணமாக ஆன்லைனில் பட்டாசு விற்போரும், வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவார்கள். ஷேக் தாவூது என்பவர் தொடர்ந்த வழக்கில்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பெயர்களில் ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
உரிய உரிமங்கள் இருப்பது இல்லாமல் ஆன்லைனில் விற்பனை செய்வதை தடை செய்ய, வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, சென்னை காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட கோரி, சென்னையை சேர்ந்த பட்டாசு வியாபாரி, ஷேக் தாவூது ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், உரிய உரிமம் இல்லாமல் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று தான் அதிகாரிகளிடம் மனு அளித்ததாகவும், ஆன்லைன் விற்பனையை கட்டுப்படுத்த வழியில்லை என்று அவர்கள் கூறிவிட்டதாகவும், இப்படியே நிலைமை தொடர்ந்தால், பாதுகாப்பற்ற சீன பட்டாசுகள் விற்பனை நடைபெறும். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வைத்தியநாதன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வழக்கு நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைனில் விற்பனை செய்வோரும், அதை நம்பியிருந்த வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.