ஜோதிடர்கள் போல மேல்நாட்டு விஞ்ஞானிகளால் வானியலை கணிக்க முடியாது.. யாகம் நடக்கலாம்: ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: தமிழக ஜோதிடர்களை போல வெளிநாட்டு விஞ்ஞானிகளும் வானியல் நிகழ்வுகளை சரியாக கணிக்க முடியாது என கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மழை வேண்டி கோவில்களில் நடைபெறும், சிறப்பு பூஜைகளுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தமிழகத்திலுள்ள பிரபலமான கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்றும், அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை அண்மையில் உத்தரவிட்டது.

இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவு செய்தனர். யாகம் வளர்த்தால் எப்படி மழை வரும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், மழை பெய்ய வேண்டி இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் யாகம் நடத்த உத்தரவிட்ட தமிழக அரசின் சுற்றறிக்கைக்கு தடை கோரி சென்னை ஹைகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறையிடம், இதுபற்றி விளக்கம் கேட்டது. அதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை, பஞ்சாங்கத்தின் அடிப்படையில் யாகங்கள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளித்தது.
இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழக ஜோதிடர்களை போல துல்லியமாக மேலை நாட்டவர்களால் வானவியல் நிகழ்வுகளை கணிக்க முடியாது. அந்த அளவுக்கு நமது பஞ்சாங்கங்கள் தெளிவாக வான் சாஸ்திரங்களை கணித்துள்ளன. இதுபோன்ற யாகம் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகிறது. எனவே இதை தடை செய்ய அவசியம் இல்லை. இவ்வாறு உயர் நீதிமன்றம் தெரிவித்து, யாகங்கள், சிறப்பு பூஜைகளுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications