விளம்பரத்துக்காக இப்படிலாம் பண்ணலாமா.. கிருஷ்ணசாமியை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நீதிபதிகள்!
சென்னை: தமிழகத்தில் மே 2-ல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது போன்று அற்ப காரணங்களுடன் வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் அவரை எச்சரித்தனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் வரும் மே 2-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

கிருஷ்ணசாமி வழக்கு
இந்த நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் 'தமிழகத்தில் அதிக அளவில் பணம் பட்டுவாடா நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் 430 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தடை விதிக்க வேண்டும்
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே பண பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். அதுவரை வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

நாங்கள் முடிவெடுக்க முடியாது
அப்போது 'பண பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும்' என்று கிருஷ்ணசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வேளையில் குறுக்கிட்ட தலைமை நீதிபதி அமர்வு, 'உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடுவது தொடர்பாக உயர் நீதிமன்றமோ தேர்தல் ஆணையமோ முடிவெடுக்க முடியாது.

அற்ப காரணம்
எனவே வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய எந்த வித முகாந்திரமும் இல்லாத இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். வெறும் விளம்பரத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இனி இது போன்று அற்ப காரணங்களுடன் வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் அவரை எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications