இது என்ன வடஇந்தியாவா? சிம்மாசனத்தில் MLA.. சேரில் அதிகாரிகள்.. தவெக MLA கனிமொழி போட்டோவால் சர்ச்சை
கோயம்புத்தூர்: கவுண்டம்பாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படம் தற்போது பெரும் விவாதத்தையும், பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களின் கடுமையான விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிதாகப் பதவியேற்றுள்ள எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தொகுதிப் பிரச்சினைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்:

"கவுண்டம்பாளையம் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்களை சந்தித்து, தொகுதியில் பொதுச் சுகாதார சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுவது, தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்படுவது, கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவது, நோய் தடுப்பு நடவடிக்கைகள் திறம்பட செயல்படுத்தப்படுவது மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுகாதார வசதிகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுவது குறித்து விரிவாக கலந்துரையாடினேன். மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, தேவையான அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்களுக்கு வலியுறுத்தினேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
வெடித்த சர்ச்சை: "மக்களாட்சி முறையா? பண்ணையார் தனமா?"
அவர் வெளியிட்ட அந்தப் புகைப்படத்தில், எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஒரு பிரம்மாண்டமான, அரியணை போன்ற ஆடம்பரமான சோபா நாற்காலியில் (Sofa Chair) அமர்ந்திருக்கிறார். ஆனால், அவரிடம் ஆலோசனை நடத்த வந்த அரசு பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வயதில் மூத்தவர்கள், அவருக்கு முன்பாக மிகச் சாதாரண பிளாஸ்டிக் மற்றும் இரும்பு நாற்காலிகளில் மிக நெருக்கமாகவும், தாழ்வாகவும் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் காட்சிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை ஈர்த்து வருகிறது. "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, அரசு அதிகாரிகளைத் தன் வீட்டுக்கோ அல்லது தனிப்பட்ட அலுவலகத்திற்கோ வரவழைத்து, தான் மட்டும் ஒரு 'மகாராணி' போல உயரிய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, அதிகாரிகளைச் சாதாரண நாற்காலிகளில் அமர வைப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் குவியும் கண்டனங்கள்
இப்புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, தவெக கட்சியின் தொண்டர்களே இந்தச் செயலைத் திறந்தே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள சில கடுமையான கருத்துக்கள் இதோ:
மக்களோடு மக்களாக இருங்கள்: "இது உங்க அலுவலகமா இருந்தாலும் சரி, வீடா இருந்தாலும் சரி, உங்க சிம்மாசனத்த தூக்கி வீசிட்டு மக்களோட மக்களா இருங்க... உங்கள அந்த MLA பதவில உட்கார வச்சது அந்த மக்கள் தான். இந்த 5 வருசம் ஆட்ற ஆட்டமெல்லாம் ஆடிட்டு போயிடலாம்னு நினைக்காதீங்க!" எனப் பதிவிட்டுள்ளனர்.
அகங்காரத்தை தூக்கிப் போடுங்கள்: "அது என்ன உங்களுக்கு மட்டும் சிம்மாசனம் மாதிரி இருக்கை? உங்களுடைய அகங்காரம், ஆணவம், பண்ணையார் தனம் இதையெல்லாம் தூக்கிப் போட்டு விடுங்கள். விளம்பரத்திற்காக இல்லாமல் மக்களோடு உண்மையா வேலை செய்யுங்க!" என்று பலரும் சாடியுள்ளனர்.
எம்.எல்.ஏ அலுவலகம் இல்லையா?: "அதிகாரிகளை ஏன் வீட்டுக்குக் கூப்பிட்டு வச்சுப் பேசுறீங்க? உங்களுக்குன்னு தொகுதி எம்.எல்.ஏ அலுவலகம் இல்லையா? இல்லையென்றால் நேரடியாகக் களத்துக்கே போய் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த முடியாதா?" என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

சொந்தக் கட்சித் தொண்டர்களின் எச்சரிக்கை
புதிதாகத் தொடங்கப்பட்டு, "மக்களுக்கான மாற்று அரசியல்" என்ற முழக்கத்தோடு களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரே, ஆரம்பத்திலேயே இத்தகைய 'அதிகாரத் தோரணையை' வெளிப்படுத்துவது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
"இனிமேலும் இது போன்ற செயல்கள் தொடர்ந்தால், தவெக தொண்டர்கள் நாங்களே உங்களை கடுமையாக விமர்சிப்போம்" என்று சொந்தக் கட்சியினரே எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷிற்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, மக்கள் பிரதிநிதிகள் தங்களை 'அதிகார வர்க்கமாக' காட்டிக் கொள்ளாமல், எளிய மக்களோடு எளிமையாகப் பழக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கவுண்டம்பாளையம் தொகுதி மக்களிடையே பலமாக எழுந்துள்ளது. இந்தச் சர்ச்சை குறித்து எம்.எல்.ஏ தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications