கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய வகையில் பாஸ்போர்ட்டை வழங்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் சிவகங்கை தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தான் கார்த்தி சிதம்பரம், தன் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்து தரக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். அவர் வாதாடுகையில், ‛‛கார்த்தி மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாககூடிய வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து வழங்க முடியாது எனவும், ஓராண்டுக்கு மட்டுமே புதுப்பிக்கப்படும்'' என வாதிட்டார்.
கார்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‛‛பாஸ்போர்ட் சட்ட விதிகளின்படி 10 ஆண்டுகளுக்கு சல்லத்தக்க வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பித்து பெற உரிமை உள்ளதாகவும், அவ்வாறு புதுப்பிக்க மத்திய அரசு மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை'' என்றும் வாதிட்டார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த தீர்ப்பில், கார்த்தி சிதம்பரத்திற்கு 10 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட்டை நீட்டிக்க மறுப்பதற்கு உரிய காரணங்களை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தை நாடும்போதும் நீதிமன்றம் விதிக்ககூடிய நிபந்தனைகளை இதுவரை அவர் மீறவில்லை. இதனால் கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொடுக்கும்படி சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
மேலும், புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், வெளிநாட்டிற்கு செல்லும்போது வழக்கம்போல் உரிய மனுவை தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இதனால் கார்த்தி ப சிதம்பரம் நிம்மதியடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications