ஜாமீன் வழங்கிய 7 நாட்களுக்குள் கைதிகள் சிறையில் இருந்து விடுதலையாக வேண்டும்.. சென்னை ஐகோர்ட் ஆணை!
சென்னை: நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கிய ஏழு நாட்களில், கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800க்கும் மேற்பட்டவர்கள், ஜாமீன் கிடைத்தும், பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக, டி.டி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ், தமிழகம் முழுவதும் 153 விசாரணைக் கைதிகளும், 22 தண்டனைக் கைதிகளும், ஜாமீன் கிடைத்தும் பிணை செலுத்த முடியாததால் வெளிவர இயலவில்லை எனவும், மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு திட்டத்தை பின்பற்றி, ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, ஜாமீன் கிடைத்த ஏழு நாட்களில் கைதிகள் விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டப் பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட கைதிகள், ஜாமீன் கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கைதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அவர்களை விடுதலை செய்ய என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலருக்கும் உத்தரவிட்டனர்.
அதேபோல, அரசு உதவித் திட்டம் மூலம் பயனடைந்த கைதிகளின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications