அம்மா சிமெண்ட் வினியோகத்தில் முறைகேடு.. தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அம்மா சிமெண்ட் வினியோகத்தில் நடந்த முறைகேடு நடந்ததாக பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், இது தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2014ஆம் ஆண்டு அம்மா சிமெண்ட் என்ற திட்டத்தை அறிவித்தார். அதிமுக ஆட்சியில் அம்மா குடிநீர், அம்மா உணவகம் எனப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படி அறிவிக்கப்பட்ட கடைசி திட்டம் அம்மா சிமெண்ட் ஆகும்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எப்படியாவது ஒரு வீட்டைக் கட்டியாக வேண்டும் என்பதே கனவாக இருக்கும். இது போன்றவர்களுக்கு சந்தையைக் காட்டிலும் குறைவான விலையில் சிமெண்ட் வழங்குவது தான் இந்த அம்மா சிமெண்ட் திட்டமாகும்.

வழக்கு
இதனிடையே இந்த அம்மா சிமெண்ட் வினியோக திட்டத்தில் நடந்த முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் யோகேஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். திருப்பூர் தாராபுரம் அடுத்துள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் வினியோகத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

முறைகேடு
அம்மா சிமெண்ட்டிற்கு இருக்கும் கிடங்கில் ஆவணங்களின் படி இருக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே சிமெண்ட் மூட்டைகள் இருப்பதாகப் புகார் அளித்ததாகவும் தனது புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தணிக்கை பிரிவு உதவி இயக்குநர் நடத்திய ஆய்வில் ஆவணங்களைக் காட்டிலும் சிமெண்ட் மூட்டைகள் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

4,217 சிமெண்ட் மூட்டைகள்
மேலும், போலி ஆவணங்கள் தயாரித்து பயனாளிகள் பெயரில் தனியார் நிறுவனம் ஒன்றே சிமெண்ட் மூட்டைகளுக்கான தொகையைச் செலுத்தியுள்ளதாக அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இப்படி மொத்தம் 4,217 சிமெண்ட் மூட்டைகள் வினியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சிமெண்ட் கிட்டங்கியை நிர்வகிக்கும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு எதிராக மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எந்த வழக்கும் பதியப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

அரசு தரப்பில் விளக்கம்
இதனால் இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் இதில் குந்தடம் வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றம் உத்தரவு
வழக்கு குறித்து போலீசார் விரிவான விசாரணையை நடத்தி வருவதாகவும் விசாரணைக்கு பிறகே இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளும் வழக்கில் சேர்க்கப்படுவர் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கிடையே அம்மா சிமெண்ட் வினியோகத்தில் நடந்த முறைகேடு விசாரணை குறித்து அடுத்த மூன்று வாரங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications