"திருமாவுக்கு நிம்மதி".. இந்துக்களின் உணர்வை புண்படுத்தியதாக பதிவான வழக்கு ரத்து.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: இந்துக்களின் உணர்வுகளைபுண்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்ததாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அதிரடியாக ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக தொல் திருமாவளவன் இருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் விசிகவின் மகளிர் அணி சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் விசிகவின் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது சனாதன தர்மம் குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்தார். திருமாவளவனின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இந்து அமைப்பினர், பாஜகவினர் திருமாவளவனை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
திருமாவளவன் மீது வழக்கு
இதுதொடர்பாக இந்து முன்னணியின் பொதுச்செயலாளர் கண்ணன் என்பவர் புதுச்சேரி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது திருமாவளவனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது.
ரத்து செய்யக்கோரி வழக்கு
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று திருமாவளவன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் புதுச்சேரி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரும் திருமாவளவனின் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு அதிரடி ரத்து
அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''கல்விக்கு எதிரான சனாதன கொள்கை என்ற அடிப்படையில் திருமாவளவன் பேசினார். இந்துக்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தவில்லை. யாருக்கு எதிராகவும் அவர் பேசவில்லை. இந்த வழக்கில் 3 ஆண்டு வரை மட்டுமே தண்டனை விதிக்க முடியும். ஆனால் 6 ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதம் வைக்கப்பட்டது.
திருமாவளவன் நிம்மதி
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் திருமாளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் திருமாளவனுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications