தங்கம் தென்னரசு சொத்து குவிப்பு வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை.. பரபரக்கும் வாதங்கள்
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி ஆகியோருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு இருந்த நிலையில், முதலில் கீழமை நீதிமன்றங்கள் அவர்களை விடுவித்தன.

தங்கம் தென்னரசு: இருப்பினும், இந்த கேஸ்களில் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளை சூமோட்டோ எனப்படும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இருப்பினும், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் சூமோட்டோ வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதைச் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்வார் என உத்தரவிட்டார். இதையடுத்து சூமோட்டா வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து விசாரித்து வந்தார். அதன்படி சமீபத்தில் தான் அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதற்கிடையே அடுத்த கட்டமாக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
வழக்கு விசாரணை: வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், குற்ற வழக்கைப் பாரபட்சமான எண்ணத்துடன், முறையான விசாரணை நடத்தாவிட்டால் அது அரசியல் சட்டப் பிரிவுக்கு எதிரானது எனவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் உண்மையைக் கண்டறியும் நோக்குடன் விசாரணை நடத்தப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
வாதம்: மேலும், வருமானத்துக்கு உரியக் கணக்கைத் தாக்கல் செய்தும், வருமான வரி கணக்கு உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்தும், அவற்றைக் கணக்கில் கொள்ளாமல் புறக்கணித்து, அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டது எனத் தெரிவித்தார். மேல் விசாரணையில் கூடுதல் ஆதாரங்களைச் சேகரித்த பின் வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று வழக்கில் இருந்து விடுவித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது என்றார்.
முதல் இறுதி அறிக்கையில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்ததாகக் கூறப்படும் சொத்துக்களின் அளவுக்கும், மேல் விசாரணைக்கு பிந்தைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சொத்துக்களின் அளவுக்கும் வித்தியாசம் உள்ளது. வாடகை வருவாய், விவசாய வருவாய்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. முதல் அறிக்கையில் சேமிப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.
ஆஜராக உத்தரவு: முதல் இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் செலவு கணக்குகளையும் முறையாகக் கணக்கிடவில்லை. அதனால் மேல் விசாரணை அறிக்கையை ஏற்று, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து உத்தரவிட்டதால் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியாது. முதல் இறுதி அறிக்கையில் திருப்தி அளிக்காத காரணத்தால் மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இரு இறுதி அறிக்கைகளில் எதை ஏற்பது என்பது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் வாதங்களைத் துவங்கிய மூத்த வழக்கறிஞர் ரமேஷ், மேல் விசாரணை குறித்து விளக்கிய போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனுத் தாக்கல் செய்த அப்போதைய புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன், பின்னர் மேல்விசாரணைக்கு அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தது குறித்து விளக்கம் அளிக்க ஏதுவாக, அவரை இன்று நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications