நிர்மலா தேவி வழக்கு! மாணவிகளின் புகார்களை ஏன் விசாகா கமிட்டிக்கு அனுப்பவில்லை? ஐகோர்ட் கேள்வி
சென்னை: பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் மாணவிகளின் புகாரின் மீது 6 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. இது தொடர்பாக நிர்மலா தேவிக்கு எதிரான ஆடியோ ஆதாரமும் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது அருப்புக்கோட்டை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு அப்போதைய எஸ்பி ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி இறுதி கட்ட வாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகும் என நீதிபதி பகவதி அம்மாள் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வழக்கை பெண் டிஐஐி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென DYFI நிர்வாகி கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பு தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாகா குழு விசாரணை நடத்த முடியாது.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருக்கிறார்களா என விளக்கமளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணை 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நிர்மலா தேவி வழக்கில் வரும் 26ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி, பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. 6 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரத்தில் தனியார் கல்லூரி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜூன் மாதத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications