போக்சோ வழக்கு கைதிக்கு இதய அறுவை சிகிச்சை! தனியார் மருத்துவமனைக்கு நோ சொன்ன ஹைகோர்ட்
சென்னை: போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவருக்கு தனியார் மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை செய்ய மூன்று மாத கால விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி, அவரது மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தற்போது மனுதாரரின் தந்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் தெரிவித்தார்
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பெயர் பெற்ற மருத்துவமனை என்பதால், மனுதாரர் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று கூறி, ஸ்டான்லி மருத்துவமனையில் மனுதாரரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்புக்காக செல்லும் மனுதாரருக்கோ, தாய்க்கோ எந்த கட்டுப்பாடுகளும் விதிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications