சுதந்திர தினம்! தமிழகத்தில் பாஜகவின் பைக் பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு! நீதிபதி முக்கிய உத்தரவு
சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இரு சக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகன பேரணி நடத்த அனுமதி கோரி கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி அளித்த மனுவை காவல் துறை நிராகரித்துள்ளதாகக் கூறி, பாஜக கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமான பணி ஆகியவற்றை காரணமாக கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, யார் வேண்டுமானாலும் தேசிய கொடியை ஏந்தி செல்லலாம் எனவும், வேண்டுமானால் எந்ததெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்களை காவல்துறை அறிந்து, வாகன நெரிசல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம், ஆனால் முழுவதுமாக பேரணிக்கு அனுமதி மறுக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications