சென்னையில் 100 டிகிரியை தாண்டிய வெயில்.. மாலை மழை வருமா? வானிலை ஆர்வலர் விளக்கம்
சென்னை: நேற்றை போலவே இன்றும் சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில், கடல் காற்று நகருக்குள்ளே வருவதால் மாலையில் இதமான வானிலை நிலவும் என்று தனியார் வானிலை ஆர்வலர் (COMK) தெரிவித்திருக்கிறார். அதே நேரம் சென்னையில் இரவு மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விவரித்திருக்கிறார்.
இது குறித்து COMK எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருப்பதாவது, "சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்றும் 38°C வெயில் பதிவாகியுள்ளது. கஇப்போதுதான் கடல் காற்று வீசத் தொடங்கியுள்ளதால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் புறநகர்ப் பகுதிகளில் வெப்பம் குறையும். மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது பகல் நேரங்களில் நில பகுதிகள் சீக்கிரமாக சூடாகின்றன. இதனால் இங்கு காற்று வெப்பமடைந்து விரிவடைகிறது. இதை குறைந்த காற்றழுத்த மண்டலம் என்று சொல்வார்கள். ஆனால் கடலில் இப்படி நடக்காது. கடல் முழுவதும் அடர்த்தியாக இருப்பதாலும், முழுவதும் தண்ணீர் நிரம்பியிருப்பதாலும், அது மெதுவாகத்தான் சூடாகும். எனவே கடலின் மேற்பரப்பில் இருக்கும் காற்று குளிர்ச்சியாகத்தான் இருக்கும். இதை அதிக காற்றழுத்த மண்டலம் என்று சொல்லவார்கள்.
இந்த அழுத்த வேறுபாடு காரணமாக அடர்த்தி மிகுந்த கடல் காற்று, நிலத்தை நோக்கி வரும். இதனை ஆங்கிலத்தில் sea breeze என்று சொல்வார்கள். இப்படி வரும் காற்று, நிலத்தில் ஏற்கெனவே இருக்கும் சூடான காற்றின் மீது மோதும். இந்த மோதல் காரணமாக சூடான காற்று வானத்தில் உயர எழும்பும். இதற்கு வானிலை சீரற்றதாக இருக்க வேண்டும். இது எவ்வளவு உயரத்தில் எழும்புகிறதோ, அந்த அளவுக்கு மழை வருவதற்கான சாத்தியம் இருக்கும்.
உயரே எழும்பிய சூடான காற்று, குளிர்ச்சியடைந்து அடர்ந்த மேகங்களாகவும், பின்னர் நீர் திவளைகளாக மாறும். அதன் பின்னர் புவியீர்ப்பு விசை அதை கீழே ஈர்க்கும். இப்படித்தான் மழை வருகிறது. ஆனால் எல்லா நேரமும் கடல் காற்று நிலப்பரப்பை நோக்கி வீசினாலும் மழை வந்துவிடாது. இப்படி நடக்கும்போது 100க்கு 30-60% வரைதான் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மழை வர வேண்டும் எனில் நிலப்பரப்புக்கும், கடலுக்குமான இடைவெளி கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். அதேபோல, சூடான காற்று மேலே எழும்ப வேண்டும். இப்படி எழும்பும் காற்று, வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் மேகங்களாக உருவாக வேண்டும். சில நேரங்களில் மேல் அடுக்கில் காற்று பலமாக இருந்தால், மேகங்கள் உருவாகாது. இவையெல்லாம் சரியாக இருந்தால் மழை கொட்டும். பார்க்கலாம் இன்று மாலை மழை வருகிறதா என்று.












Click it and Unblock the Notifications