மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 கிடைக்குதா! ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய இன்று சிறப்பு முகாம்!
சென்னை: மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai Thittam) பெற ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான முகாம்கள் இன்று சென்னையில் 19 மண்டலங்களில் நடைபெறுகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் உரிமைத் தொகை பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமை தொகை பெற ரேஷன் கார்டு கட்டாயம். ஆரம்பத்தில் இந்த ரூ 1000 த்தை பெற கடும் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் இருந்தன.

நாளடைவில் பெரும்பாலான பெண்களும் இந்த திட்டத்தில் பயனடைய விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. ரேஷன் கார்டு வைத்திருப்போர் முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளை அடிக்கடி திருத்த வேண்டியிருக்கும். அது போல் பெயர் நீக்குதல், பெயரை சேர்த்தல் உள்ளிட்டவையும் செய்ய வேண்டியிருக்கும்.
இதனால் தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுகளுக்காகவே மாதந்தோறும் முகாம் நடத்தப்படுகிறது. அதில் உரிய ஆவணங்களுடன் போய் ரேஷன் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவிடலாம். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் வரும் 11 ஆம் தேதியான இன்று ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் 11.10.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு/ மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications