திடீரென உயிரிழந்த சென்னை குதிரை.. லேப் ரிப்போர்ட்டில் உறுதியான கிளாண்டர்ஸ்.. மனிதர்களுக்கும் பரவுமா
சென்னை: தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் குதிரை ஒன்றிற்கு கிளாண்டர்ஸ் எனப்படும் அரிய வகை தொற்று நோய் பாதிப்பு இருப்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு இருந்தது.. இந்த நிலையில் லேப் மூலமாக தொற்று பாதிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட அந்த குதிரை இப்போது உயிரிழந்து உள்ளது.. இதனைத் தொடர்ந்து சென்னை நகர்ப்புற சூழலில் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் இப்போது மேற்கொண்டு வருகிறார்கள்..
கால்நடை மருத்துவர்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் இந்த கிளாண்டர்ஸ் என்பது Burkholderia mallei என்ற பாக்டீரியாவால் குதிரை, கழுதை, கோவேறுகழுதை ஆகிய விலங்குகளை தாக்கும் ஒரு நோயாகும்.. பொதுவாக விலங்குகளைத் தாக்கும் இந்த நோய், மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஒரு zoonotic வகையைச் சேர்ந்ததாகும்.

கிளாண்டர்ஸ் நோய் என்பது என்ன
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குதிரைகளுக்கு காய்ச்சல், தடிமனான மூக்கு சளி, தோல் பகுதிகளில் புண்கள் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை ஏற்படும்..
உலகின் பல நாடுகளில் இந்த நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்றாலும், சமீப ஆண்டுகளில் இந்தியா, ஈராக், துருக்கி, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய் மீண்டும் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.. இந்தியாவில் இந்த நோய் சட்டப்படி அறிவிக்கப்பட வேண்டிய விலங்கு நோயாக அதாவது Notifiable animal disease போல் கருதப்படுகிறது..
பரவும் விதம் & மருத்துவ விவரம்
பாதிக்கப்பட்ட குதிரையின் மூக்கு, கண்கள் அல்லது உடலில் உள்ள புண்களில் இருந்து வரும் திரவத்தின் மூலம் இந்த நோய் பரவக்கூடும்.. இதுமட்டுமல்லாமல் குதிரைகள் குடிக்கும் தண்ணீர் வாளி, தீவன பாத்திரம் மற்றும் அதன் மீது கட்டப்படும் சேணம் போன்ற பொருட்கள் மூலமாகவும் இந்த பாக்டீரியா பரவக்கூடும்.
கிளாண்டர்ஸ் நோய்க்கு இதுவரை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லை என்பதால், நோய் உறுதியானால் அவை மற்ற விலங்குகளுக்கோ பரவாமல் தடுக்க கருணைக் கொலை செய்ய அனுமதிப்பதுதான் இப்போதைய மருத்துவ நடைமுறையாக உள்ளது.
மனிதர்களுக்கு இந்த நோய் பரவக்கூடிய சாத்தியம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட விலங்குடன் மிக நெருங்கிய தொடர்பு (close contact) இல்லாத பட்சத்தில் சாதாரண பொதுமக்களுக்கு இது எளிதாகப் பரவாது என்று மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்..
அதிகாரிகள் கண்காணிப்பு தீவிரம்
சென்னையில் இந்த கிளாண்டர்ஸ் நோய் பாதிப்பால் குதிரை உயிரிழந்ததை அடுத்து கால்நடை நோய்க்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்களின் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட குதிரை வைக்கப்பட்டிருந்த இடம் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு முழுமையாக கிருமி நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த குதிரைக்கு அருகில் இருந்த மற்ற குதிரைகளையும் கண்டறிந்து அவற்றுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர எல்லைக்குள் இருக்கும் மற்ற குதிரைகளுக்கும் ரத்த மாதிரி சோதனைகள் நடத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளார்கள்.. குதிரை வளர்ப்போர் தங்களின் விலங்குகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது..!!












Click it and Unblock the Notifications