நாளை முதல்.. சென்னையில் ஸ்விக்கி, சொமேட்டோ உணவு டெலிவரி நிறுத்தம்? ஹோட்டல் சங்கம் பகீர்
சென்னை: இப்போதெல்லாம் இளைஞர்கள் மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் ஆன்லைன் தளங்கள் வழியாகவே உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள். இருப்பினும், இதுபோன்ற ஆன்லைன் நிறுவனங்கள் ஹோட்டல்களிடம் அதிக கமிஷன் தொகை வாங்குவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கிடையே கமிஷனை குறைக்கவில்லை என்றால் சென்னையில் ஆன்லைன் தளங்களுக்கு உணவு கொடுக்கப்போவதில்லை என ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தக் காலத்தில் எல்லாமே விரல் நுனியில் செல்போனில் வந்துவிட்டது. நாம் வீட்டில் இருந்து வெளியே காலடி எடுத்து வைக்காமலேயே எல்லாமே நமது வீட்டிற்கே வந்துவிடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாப்பிங் உலகை ஆன்லைன் நிறுவனங்கள் எப்படிப் புரட்டிப்போட்டதோ.. அதுபோல இப்போது உணவு டெலிவரி செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆன்லைன் டெலிவரி
வீடுகளில் இருந்தபடியே ஆர்டர் போட்டால் நிமிடங்களில் வீடு தேடி உணவு வந்துவிடும். மேலும், தொடக்கத்தில் பல்வேறு ஆஃபர்களையும் அனைத்து நிறுவனங்களும் வாரி வழங்கின. இதனால் கடைக்கு நேரில் சென்று வாங்குவதை விடக் கூட பல நேரங்களில் ஆன்லைனில் குறைவாக இருந்தது. இதனால் மக்கள் உணவு டெலிவரிக்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
அதேநேரம் காலம் செல்லச் செல்ல ஆன்லைன் தளங்களில் உணவுகளின் ரேட் அதிகரித்தது. மேலும், டெலிவரி சார்ஜ், பிளாட்பார்ம் பீஸ், பேக்கிங் பீஸ் என ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் போட ஆரம்பித்தன. இது மட்டமின்றி உணவகங்களிலும் கூட கமிஷன் என்று அதிகத் தொகை பிடித்துக் கொள்வதாகப் புகார்கள் உள்ளன.
கமிஷன் அதிகம்
ஆன்லைனில் ஸ்விக்கி,சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு ஹோட்டல்களிலும் ஒவ்வொரு மாடலில் கமிஷன் பெறுகிறார்களாம்.. கடைக்குக் கடை கமிஷன் தொகை மாறி இருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சொல்கிறார்கள். ஹோட்டல்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும்போது அந்தப் பணம் ஒரு வாரம் கழித்தே உரிமையாளர்களுக்குச் செல்கிறதாம். அப்போது அந்த டேட்டாவை எடுத்துப் பார்த்தால் ஏகப்பட்ட சார்ஜ்கள் மற்றும் கமிஷன்களை போடுகிறார்களாம்.
இதனால் பெரியளவில் நஷ்டம் ஏற்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதற்கு முதலில் நாமக்கல் பேக்கரி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும், ஜூலை 1ம் தேதி முதல் நாமக்கல் மாவட்டத்தில் சுவிக்கி, சொமேட்டோ மூலம் உணவு வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஹோட்டல் சங்கம் அறிவிப்பு
இதையடுத்து சென்னையிலும் ஸ்விக்கி, சொமேட்டோ தளங்களுக்கு உணவு தரப்போவதில்லை என்று ஹோட்டல் உரிமையாளர்கள் எச்சரித்திருந்தனர். நாளை முதல் உணவுகளைத் தர மாட்டோம் எனக் கூறியிருந்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஹோட்டல் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதில் உடனடியாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாம். நாளைய தினம் பேச்சுவார்த்தையில் சமூகமான தீர்வு எட்டப்படவில்லை என்றால், சென்னையிலும் உணவு டெலிவரி வழங்கப்படாது எனத் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சென்னை மாவட்டத் தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள்
சென்னையைப் பொறுத்தவரை ஏகப்பட்ட இளைஞர்கள் இதுபோல ஆன்லைன் நிறுவனங்களில் நிரந்தரமாகவே உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்கள். ஒருவேளை உணவு டெலிவரியில் சிக்கலில் ஏற்பட்டால் அது பல ஆயிரம் இளைஞர்களின் வாழ்வாதாரத்தையைப் பாதிக்கும் ஆபத்தும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications