தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு வானிலை மையம் குட்நியூஸ்
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
Recommended Video
அரபிக்கடலில் தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் 50-60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம்... முதலீடுகள் ஈர்த்தது பற்றி வெள்ளை அறிக்கை தேவை -மு.க.ஸ்டாலின்
மிதமான மழை
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்,
கனமழை வாய்ப்பு
ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யகூடும்,
சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்,
மழை நிலவரம்
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை விவரம் (சென்டி மீட்டரில்): ஏற்காடு (சேலம்), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி) தலா 8, பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் (தர்மபுரி), மேட்டூர் (சேலம்) தலா 7, பேரையூர் (மதுரை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), செட்டிகுளம் (பெரம்பலூர்) தலா 6 செமீ மழை பெய்துள்ளது.
கடலுக்கு போக வேண்டாம்
ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 27 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதேபோல் ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 27 வரை குஜராத் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடல் உயர் அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கொடி வரை 24.8.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர அலை 2.5 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரை எழும்பக்கூடும்" இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.