பெண் தொகுப்பாளினியும் நானும் சமரசம் ஆகிவிட்டோம்.. ஜாமீன் கேட்கும் சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி
சென்னை: பெண் தொகுப்பாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் கைதான சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்தி முனுசாமி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு நான் அடிக்கடி சென்று வருவேன். அங்கு கோயில் பூசாரியாக கார்த்திக் முனுசாமி என்பவர் உள்ளார்.

அவர் என்னுடன் நட்பாக பழகினார். இதனால் நான் கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் அவரிடம் பேசுவேன். ஒரு நாள் நான் கோயிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் என்னை அவருடைய காரில் வீட்டில் விடுவதாக சொன்னார். நானும் அவரை நம்பி காரில் ஏறினேன். பிறகு திடீரென அவருடைய வீடும் இந்த வழியில்தான் இருக்கிறது.
ஒரு முறை வீட்டுக்கு வந்துவிட்டு செல்லுமாறு தெரிவித்தார். நானும் அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு அவர் ஒரு தீர்த்தத்தை கொடுத்தார். அதை குடித்ததும் நான் மயங்கினேன். பிறகு சிறிது நேரம் கழித்து நான் கண் விழித்து பார்த்த போது அவர் வீட்டு படுக்கை அறையில் நான் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அப்போது கார்த்திக்கிடம் கேட்ட போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அவருடைய மனைவி இருந்த போதும் எனக்கு அவருடைய வீட்டில் தாலி கட்டினார். பிறகு நாங்கள் இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தினோம். இதில் நான் கருவுற்றேன். ஆனால் அவர் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார்.
பின்னர் என்னை விஐபி ஒருவரின் வீட்டுக்கு அழைத்து சென்று அவருடன் நெருக்கமாக இருக்க சொன்னார். என்னை அவருடைய தோழி மூலம் பாலியல் தொழிலுக்கு தள்ள பார்த்தார். இதற்கு மறுத்த போது கார்த்தி முனுசாமியின் மனைவி, இதையெல்லாம் வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்.
இதனால் மனமுடைந்த நான் கோயில் தலைமை குருக்களான காளிதாஸ் என்பவரிடம் போய் முறையிட்டேன். அவரோ கார்த்திக்கை திட்டுவது போல் திட்டிவிட்டு, அவரோடு குடும்பம் நடத்தியதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என என்னிடம் கேட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். என் வாழ்க்கையை சீரழித்த கார்த்திக் முனுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து கார்த்திக் முனுசாமியின் செல்போனில் ஏகப்பட்ட இளம் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்தனர். அந்த செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி எங்கே என போலீஸார் தேடி வருகிறார்கள். அவர் 30 வயது பெண்ணை யாரோ ஒரு விஐபியுடன் படுக்கையை பகிர வைத்த நிலையில் கார்த்தி கண்டறியப்பட்டால் வேறு எந்தெந்த விஐபிகளுக்கு பெண்களை சப்ளை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகும்.
மேலும் கார்த்திக் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் 10 நாட்களாகியும் கார்த்திக்கை கைது செய்யாததால் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் கொடைக்கானலில் பதுங்கியிருந்த கார்த்திக்கை போலீஸார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் தனக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications