சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ 12க்கு விற்பனை.. ஒரு நாளைக்கு 100 பேருக்கு டோக்கன்.. பட் ஒன் கண்டிஷன்
சென்னை: ஒரு கப் டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கி வருகிறார்கள். அதுவும் சென்னை கொளத்தூரில்தான் இந்த ஆஃபர் போய் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. சில்லறை விலையில் ரூ 200 வரை சென்றது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இதனால் வரத்தும் குறைந்து விட்டது. தக்காளியை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய போலீஸை பணிக்கு அமர்த்திய சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன. அது போல் தக்காளி விவசாயிகளில் பலர் லட்சாதிபதிகளாகிவிட்டனர்.
கிலோ தக்காளி வெறும் ரூ 20, 30 க்கு இருந்த நிலையில் தற்போது ரூ 170 வரை விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நூற்றுக்கணக்கில் தக்காளி லாரிகள் வந்த நிலையில் வரத்து குறைவால் 30 , 40 என்ற இரட்டை இலக்க எண்ணிக்கையிலேயே தக்காளி லாரிகள் வந்தன.
இந்த தக்காளியை வைத்து மீம்ஸ்கள் களைகட்டின. சிகப்பு தங்கம் என வர்ணிக்கப்பட்டன. சேலத்தில் ஒரு தக்காளி மார்க்கெட்டில் சிசிடிவி கேமரா போட்டு தக்காளி திருடு போவதை தடுப்பதாக செய்திகள் வெளியாகின. வடமாநிலத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வரும் தம்பதியில் கணவர் சமையலுக்கு கூடுதலாக தக்காளி பயன்படுத்தியதால் மனைவி சண்டையிட்டுக் கொண்டு வெளியேறிவிட்டார்.
இந்த நிலையில் பெட்ரோல் போட்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்றெல்லாம் அறிவிப்புகள் வெளியாகின. தக்காளி விலை அதிகரிப்பால் கடந்த ஒரு மாதமாக தக்காளி சோறு, தக்காளி சட்னி, தக்காளி குழம்பு ஆகியவற்றை செய்யவில்லை. இதனால் பல கணவன்மார்கள் ஏக்கம் தெரிவித்தனர். இந்த தக்காளி ரேஷன் கடைகளில் ரூ 60 க்கு விற்பனையாகிறது.
ஆனால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தக்காளி கொடுப்பதால் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தும் தக்காளி கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை கொளத்தூர் கணபதி ராவ் நகரில் உள்ள ஒரு டீ கடையில் ஆடி மாத ஆஃபரை கொடுத்துள்ளார்கள். அதாவது அந்த கடையில் ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த டீக்கடைக்கு மக்கள் படையெடுத்தார்கள். மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே கணித்த டீக்கடைக்காரர் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார். ஒரு கிலோ தக்காளி ரூ 200 க்கு விற்று வந்த நிலையில் ரூ 12க்கு டீ வாங்கினால் தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதையடுத்து ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனை கொடுப்போருக்கு மட்டும் ஒரு கிலோ தக்காளி வழங்கப்படுகிறது. இந்த விற்பனை 3 நாட்களுக்கு உண்டு. 300 டோக்கன்களுக்கு 300 கிலோ தக்காளி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில் தக்காளியின் விலை உயர்வு சாமானிய மக்களை புரட்டி போட்டுவிட்டது. சமையலுக்கு முக்கியமானது தக்காளி. அந்த தக்காளியை போடாமல் எத்தனை நாட்களுக்குத்தான் சமையல் செய்வது. இதனால்தான் தக்காளியை கொடுக்கிறோம். மக்களும் எந்த இடையூறையையும் ஏற்படுத்தாமல் எங்களை வாழ்த்தி தக்காளிகளை வாங்கிச் செல்கிறார்கள் என உரிமையாளர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications