5 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு சந்தை இன்று திறப்பு... வியாபாரிகள் மகிழ்ச்சி..!
சென்னை: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இன்று காலை முதல் கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களும் முகக்கவசம் அணியாமல் சந்தைக்குள் வரக்கூடாது என மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் கடுமையான முறையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 194 மொத்த காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு பூ, பழம் உள்ளிட்ட கடைகளை திறக்க இன்னும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டுள்ள நிலையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சரக்கு லாரிகள், வேன்கள் சந்தைக்குள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி கடை மொத்த வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியது போல் தங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கோயம்பேடு மார்க்கெட் பூ மற்றும் பழக்கடை மொத்த வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரே நேரத்தில் மொத்தமாக சந்தையை செயல்பட அனுமதித்தால் அதனால் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மீண்டும் கோயம்பேடு சந்தை மாறிவிடக் கூடாது எனக் கருதி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வியாபாரத்துக்காக காய்கறி மூட்டைகள் நேற்றிரவு 9 மணி முதலே கோயம்பேடு சந்தைக்கு குவியத் தொடங்கியுள்ளன. இதனால் சரக்கு வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு போக்குவரத்து போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications