சென்னையில் பெண் நீதிபதிக்கு காதல் தொல்லை கொடுத்த வக்கீல்.. அதிரடியாக விதிக்கப்பட்ட தண்டனை
சென்னை: சென்னையில் பெண் நீதிபதிக்கு காதல் தொல்லை கொடுத்த புகாரில் வக்கீலுக்கு தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை கொடுத்த புகாரின் மீதான விசாரணை முடியும் வரை, வக்கீல் சிவராஜ் என்பவரை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் என்பது இந்தியாவின் நான்கு முக்கியமான உயர்நீதிமன்றங்களில் ஒன்று. இங்கு பல்வேறு நீதிமன்ற அமர்வுகள் உள்ளன. இதேபோல் மாவட்ட நீதிமன்றங்களும் உள்ளன. சென்னையில் உயர்நீதிமன்றத்தை ஒட்டியும் அதன் அருகிலும் மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நீதிபதி ஒருவருக்கு காதல் தொல்லை கொடுத்து வந்த வக்கீலுக்கு தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் வக்கீல் பி.எஸ்.அமல்ராஜ் கூறுகையில், மாவட்ட அளவிலான நீதிமன்றத்தில் பெண் நீதிபதி ஒருவருக்கு வக்கீல் சிவராஜ் என்பவர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அந்த பெண் நீதிபதியின் கோர்ட்டில் வழக்கு எதுவும் இல்லாவிட்டாலும், அங்கேயே போய் வக்கீல் சிவராஜ் உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
கோர்ட்டு பணிகளை ஆய்வு செய்ய சென்ற சென்னை நீதிபதிக்கு இந்த தகவல் தெரியவர, அவரும் அறிவுரை கூறி எச்சரிக்கை செய்துள்ளார். அதன்பின்னரும், பெண் நீதிபதியை பின் தொடர்வதை நிறுத்தவில்லை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் பார் கவுன்சிலுக்கு புகார் அளித்தார்.
அந்த புகாரில், நீதி பரிபாலனத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல், பெண் நீதிபதிக்கு மன உளைச்சலை ஏற்படுத்துதல், பெண் நீதிபதிக்கு அவதூறு மற்றும் தொந்தரவு செய்தல் போன்ற செயல்களில் சிவராஜ் ஈடுபடுவதாக கூறியிருந்தார். இதையடுத்து, இந்த புகார் மீதான விசாரணை முடியும் வரை சிவராஜை வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளோம்.. இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் வக்கீல் பி.எஸ்.அமல்ராஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications