பிரபு தேவா தம்பி ஏமாந்தது இப்படித்தான்.. சென்னையில் லீசுக்கு போறவங்க, விடுறவங்க கவனிக்க வேண்டியவை
சென்னை: சென்னையில் நடிகர் பிரபு தேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத் வீட்டை ஒரு நிறுவனத்திற்கு லீசுக்கு விட்டுள்ளார்.. அந்த நிறுவனத்தினர் அவரது வீட்டை வேறு ஒருவருக்கு லீசுக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் பிரபுதேவா தம்பி இதில் ஏமாற்றப்பட்டுள்ளார். சென்னையில் லீசுக்கு போறவங்க, லீசுக்கு விடுறவங்க கவனிக்க வேண்டியவை குறித்து பார்ப்போம்.
சென்னையில் நடிகர் பிரபுதேவாவின் சகோதரரும் நடிகருமான நாகேந்திர பிரசாத் வீட்டில் லீசுக்கு இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு வீட்டை பூட்டி வெல்டிங் வைத்துள்ளார். காவல்துறையின் உதவியோடு கதவு திறக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது.. லீசுக்கு விடுபவர்கள், லீசுக்கு செல்பவர்களுக்கு இந்த சம்பவம் நிச்சயம் ஒரு பாடம் ஆகும்..

விக்னேஷ் என்பவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடிகர் நாகேந்திர பிரசாத்திடம் வீடு வாடகைக்குக் கேட்டிருக்கிறார். அப்போது நாகேந்திர பிரசாத் இந்த வீட்டினை கேர் டேக்கர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு லீசுக்கு விட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் நீங்கள் ரூபாய் 25 லட்சம் லீசுக்கு பணம் செலுத்துங்கள் என்றும், அதன் பிறகு அந்த நிறுவனத்திடம் இருந்து தாங்கள் மாதம், மாதம் 36 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொள்வதாகவும் கூறினாராம்.
இதையடுத்து விக்னேஷ் இந்த வீட்டை லீசுக்கு எடுப்பதற்கு 25 லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்திற்குச் செலுத்தி உள்ளார்.. அந்த நிறுவனமானது திடீரென கடந்த ஒரு வருடமாக நடிகர் நாகேந்திர பிரசாத்திற்குப் பணத்தைத் தராமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.
வீட்டிற்கான வாடகை பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த நாகேந்திர பிரசாத், அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த விக்னேஷை உடனடியாக காலி செய்யும்படி கூறியுள்ளளார். ஆனால் விக்னேஷ் நாங்கள் 25 லட்சம் பணத்தைச் செலுத்தி உள்ளோம், என வீட்டை காலி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து, நாகேந்திர பிரசாத் தனது நண்பர்களை அழைத்து வந்து விக்னேஷ் குடும்பத்தாரை வெளியே அனுப்பி விட்டு வீட்டைப் பூட்டி கிரில் கேட்டில் வெல்டிங் வைத்திருக்கிறார்.
இதனால் கடந்த நவம்பர் 7ம் தேதி ஒரு நாள் முழுவதும் விக்னேஷ் குடும்பத்துடன் வீடு இல்லாமல் வெளியே இருந்திருக்கிறார் இது குறித்து, விக்னேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டின் கிரில் கேட்டை நாகேந்திர பிரசாத் முன்னிலையில் போலீசார் உடைத்து விக்னேஷை வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்கள்.
தான் செலுத்திய ரூபாய் 25 லட்சம் லீஸ் தொகையைத் திருப்பி கொடுத்து விட்டால் தான் இந்த வீட்டை காலி செய்து விட்டுச் சென்று விடுவதாக விக்னேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கேர் டேக்கர் என்ற நிறுவனத்திற்கு லீசுக்கு விட்டுள்ளளார் பிரபு தேவா தம்பி நாகேந்திர பிரசாத். அந்த நிறுவனம் விக்னேசுக்கு லீசுக்கு விட்டு 25 லட்சத்தை வாங்கி உள்ளது.. அவர்கள் நாகேந்திர பிரசாத்திற்கு பணத்தை தாராமல் ஏமாற்றிவிட்டதால் லீசுக்கு வந்த விக்னேசும் அவதிப்படுகிறார். லீசுக்கு விட்ட நாகேந்திர பிரசாத்தும் அவதிப்படுகிறார்.
இதுபோன்று ஏமாறுவதை தடுக்க லீசுக்கு போகிறவர்கள் லீசுக்கு விடும் வீடு அவர்களுடையது தானா என்பதை அறிந்து செல்ல வேண்டும். நேரடியாக வீட்டின் உரிமையாளரிடம் மட்டுமே ஒப்பந்தம் போடுவது இந்த சிக்கல்கள் வராமல் தடுக்கும். அதேபோல் லீசுக்கு விட விரும்புபவர்கள் நேரடியாக யார் குடியிருக்க வருகிறார்களோ அவர்களுக்கு லீசுக்கு விட வேண்டும். லீசுக்கு விட்ட வீட்டை மறு லீசுக்கு விடுவது, வாடகைக்கு விடுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது என்று ஒப்பந்தம் போட வேண்டும். இந்த ஒப்பந்தத்தை பத்திர ஆபிஸில் பதிவு செய்வதும் கட்டாயம் ஆகும். அப்போது தான் பிரச்சனை வராது..












Click it and Unblock the Notifications