ரம்ஜான் விருந்தில் பிரியாணியோடு, நகைகளை விழுங்கிய நபர்... சென்னையில் நடந்த பரபர சம்பவம்
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் ரம்ஜான் விருந்தில் பிரியாணி சாப்பிட்ட நபர், வீட்டில் இருந்த தங்க, வைர நகைகளையும் திருடி விழுங்கினார். இதுகுறித்த போலீஸ் புகாரில் ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை அடுத்த சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 34 வயது நிரம்பிய பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு - மருத்துவமனையில் அனுமதி
இவர் நகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். ரம்ஜான் பண்டிகையையொட்டி நகைக்கடையில் பணிபுரியும் பெண் ஒருவரை வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி அழைத்தார்.
பிரியாணி விருந்து
மே 3 ரம்ஜான் தினத்தன்று அந்த பெண், தனது 32 வயது நண்பர் ஒருவருடன் வீட்டுக்கு வந்தார். இதையடுத்து இருவருக்கும் வீட்டில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. விருந்தை முடித்த இருவரும் சிறிது நேரம் வீட்டில் அவருடன் பேசி கொண்டிருந்தனர். அதன்பிறகு அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
நகைகள் மாயம்
இந்த வேளையில் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த வைர, தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. மறதியாக வேறு இடத்தில் வைத்திருக்கலாம் என நினைத்து விருந்துக்கு அழைத்த பெண் வீடு முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் நகை அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் வீட்டுக்கு வந்த நபர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை வீட்டிற்கு அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
நகையயை விழுங்கியது அம்பலம்
இதையடுத்து சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையின்போது நகைக்கு ஆசைப்பட்டு கைவரிசை காட்டியதாக அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும், நகையை திருடி விழுங்கிவிட்டு அதன்பிறகு பிரியாணி சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
நகை மீட்பு
இதையடுத்து அவரை அழைத்து சென்றுமருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர் நகையை விழுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இனிமா கொடுத்து ரூ.1.45 லட்சம் மதிப்பிலான நகைகள் வெளியே எடுக்கப்பட்டது. நகைகள் கிடைத்ததே போதும். கைவரிசை காட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என புகார்தாரர் கூறியுள்ளதால் விசாரணை மட்டும் நடக்கிறது. ரம்ஜான் விருந்துக்கு வந்தவர் பிரியாணியுடன் சேர்த்து நகைகளை விழுங்கி திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.