கடல்லயே இல்லையாம்.. மெரினா பீச் சென்ற பொது மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Recommended Video
சென்னை: காற்று வாங்க கடற்கரைக்கு வந்தால், இங்கு, மரத்திலுள்ள இலைகள் கூட அசைய மறுக்கிறது என்று புலம்பி சென்றுள்ளனர் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்கள்.
சென்னை உட்பட, தமிழகம் முழுக்க கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில்தான், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வங்க கடலில் புயல் உருவானது.
ஆனால் அந்த புயலும் திசைமாறி, தமிழகத்திற்கு வராமல் வங்க தேசத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மெரினா கடற்கரை
இந்த நிலையில், வெயில் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக சென்னை மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், மெரினா கடற்கரையில் குவிந்தனர். மெரினா கடற்கரைக்கு சென்ற பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காற்று வாங்கலாம் என்று நினைத்து கடற்கரைக்குச் சென்ற அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

புழுக்கத்தில் மக்கள்
வழக்கமாக எந்த ஒரு கடற்கரையாக இருந்தாலும் சுழன்று சுழன்று காற்று வீசுவது வழக்கம். ஆனால் மெரினா கடற்கரையில் நேற்று கொஞ்சம் கூட காற்று வீசவில்லை. இதனால் கடற்கரையில் கூட புழுக்கத்தில் தவித்தனர் மக்கள்.

எப்படி தாக்கம்
கடற்கரையில் கூட காற்று வீசாததற்கு காரணம் என்ன என்பது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதற்கு காரணமும், ஃபனி பயலின் தாக்கம் தான் என்று கூறினர். அது எப்படி 900 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஃபனி புயலால் மெரினாவில் தாக்கம் ஏற்படுத்த முடிந்தது? அதையும் அவர்களே விளக்கினர்.

ஈரப்பதம்
ஃபனி புயல் வங்க கடலில் சுழன்றடித்து சென்று கொண்டிருப்பதால் தரைப் பரப்பில் உள்ள ஈரப்பதம் கொண்ட காற்றை ஈர்க்கிறது. தரைப்பகுதியில் இருந்து காற்றை கடலுக்குள் இழுப்பதால், கடலில் இருந்து தரைப்பகுதியை நோக்கி காற்று வீசவில்லை. இதன் காரணமாகத்தான் மெரினா கடற்கரையில் கடும் புழுக்கம் ஏற்பட்டது. இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தில் இன்னும் வெப்பம் அதிகரிக்கத் தான் செய்யும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications