அரசு விழாவை கேலிக்கூத்தாக்கிய சென்னை மேயர் பிரியா ராஜன்! காதில் செல்போன் கையில் சர்டிஃபிகேட்!
சென்னை: தனது பொறுப்பற்ற செயலால் அரசு விழாவை கேலிக்கூத்தாக்கி இருக்கிறார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்.
சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இந்த சான்றிதழ்களை அதிகாரிகளுக்கு வழங்கினர். இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த அரசு விழாவை ஒரு போன் கால் மூலம் மொத்தமாக சொதப்பிவிட்டார் மேயர் பிரியா.

என்ன தான் அவசர அழைப்பாக இருந்தாலும் முக்கியமான சப்ஜெக்ட் என்னவென்று கேட்டுவிட்டு அதிகாரிகளை மேடைக்கு அழைத்து நிறுத்தி காக்க வைக்காமல் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியிருக்கலாம். அதை விடுத்து தாம் ஏதோ ரொம்ப பிசியாக இருப்பது போல கழுத்தை சாய்த்து காதில் போனை வைத்துக்கொண்டே ஒற்றைக் கையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அதிகாரிகளை அவமரியாதை செய்திருப்பதோடு திமுகவுக்கும் தர்மசங்கடமான சூழலை உருவாக்கிவிட்டார்.
அதுமட்டுமல்ல மிக மூத்த அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜெ.ராதாகிருஷ்ணனையும் மேயர் பிரியா டென்ஷன் ஆக்கிவிட்டார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவர் கோபத்தை வெளிக்காட்டாமல், அதிகாரிகளை காக்க வைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தாமே சான்றிதழை கொடுத்துவிட்டார். சென்னை மேயர் பிரியா ராஜன் போன் பேசிக்கொண்டே பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
''சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது'' என்பார்கள் கிராமத்தில். அது போல் உள்ளது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனின் செயல்பாடுகள். இவரால் திமுகவுக்கு கிடைத்த நற்பெயரை விட விமர்சனங்கள் தான் அதிகம் கிடைத்திருக்கின்றன. மேயராக பொறுப்பேற்ற புதிதில் தான் விளையாட்டுத் தனமாக நடந்துகொண்டார் என்றால் 2 ஆண்டுகளாகியும் இன்னும் அரசியல் முதிர்ச்சியோ, நிர்வாக முதிர்ச்சியோ பிரியா ராஜனிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications