சென்னை மேயர் பிரியா திடீர் விசிட்.. பரபரத்த அரசு மருத்துவமனை.. நோயாளிகளிடம் குறைகேட்பு
சென்னை: சென்னை மாநகராட்சி அரசு மருத்துவமனையில் மேயர் பிரியா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கட்சிகளே வென்றன. இதில் 20 மாநகராட்சிகளுக்கு திமுக உறுப்பினர்கள் மேயராகவும் ஒரே ஒரு மாநகராட்சியான கும்பகோணத்தில் காங்கிரஸ் உறுப்பினர் மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை மாநகராட்சியின் மேயராக திமுகவின் ஆர் பிரியா தேர்வு செய்யப்பட்டார். பட்டதாரியான இவர் வடசென்னையை சேர்ந்தவர். மழை நீர் வடிகால் பணிகள் உள்ளிட்டவைகளை முதல்வர் ஸ்டாலினுடன் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டிருந்தார்.

கண்ணகி நகர்
இந்த நிலையில் சென்னை கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி மற்றும் எஸ்.டி ஆர்ட் இந்திய நிறுவனம் இணைந்து வரைந்த சுவர் ஓவிய திறப்பு விழாவை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் துவங்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி
உடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து குடியிருப்புகளில் வரையப்பட்டிருந்த ஓவிய காட்சிகளையும் பார்வையிட்டார்.

சென்னை மாநகராட்சி மருத்துவமனை
பின்னர் அந்தப் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு திடீரென சென்னை மேயர் பிரியா ராஜன் வருகை தந்தார். பின்னர் மருத்துவமனையில் குறைகள் ஏதேனும் உள்ளதா என்றும் மருத்துவமனைக்கு கூடுதல் உபகரணங்கள் தேவைப்படுகிறதா என்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பிரசவ வார்டு மற்றும் பொது வார்டுகளை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

மழைநீர் வடிகால் பணிகள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா ராஜன்: சுவர் ஓவியங்களை சிறப்பாக செய்துள்ளனர், இந்த பகுதியோடு இதை முடித்துவிடாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பது குறித்துகேள்வி எழுப்பிய போது :- புதிய திட்டங்களை கொண்டு செயல்பட்டு வருவதாகவும் தமிழக முதல்வர் அவர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் மேலும் இதுபோன்று நடக்காமல் நடவடிக்கை எடுப்பதாகவும் மேயர் பிரியா தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications