சென்னையில் அரசு டாக்டர் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி தற்கொலை.. சிக்கியது உருக்கமான கடிதம்
சென்னை: ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை மருத்துவ கல்லூரியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணரான பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தற்கொலைக்கான காரணம் குறித்து உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையை சேர்ந்த 42 வயதாகும் கார்த்தி (வயது 42)' இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். டாக்டர் கார்த்தி ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் உள்ள மாமாவின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இவருடைய தந்தை உலகநாதனும் டாக்டர் ஆவார். இவர் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கார்த்தியின் தாய் கஸ்தூரிக்கு முதுமை காரணமாக உடல் நிலை சரியில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்தியின் தங்கை தீபா அமெரிக்காவில் டாக்டராக உள்ளார். அங்கேயே கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கார்த்தி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா சமயத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, அவருக்கு 3 முறை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் பணிக்கு வந்தார். 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் கார்த்தி.
கார்த்தி அமெரிக்காவில் உள்ள தனது தங்கை தீபாவிடம் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவாராம். அப்படித்தான் கடந்த 19-ந்தேதி தீபா, கார்த்திக்கை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை தொடர்ந்து 2 நாட்களாக தன்னுடைய அண்ணன் கார்த்திக்கை அழைத்தும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த தீபா தனது தந்தை உலகநாதனிடம் அண்ணன் போனை எடுக்காதது குறித்து கூறியிருக்கிறார். அதன் பின்னர், உலகநாதன் கார்த்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போதும் அவர் அழைப்பை எடுக்கவே இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த தீபா தன்னுடைய தோழியான ஸ்ரீவித்யா என்பவருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு நேரில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீவித்யா, கார்த்தியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு திறந்து கிடந்துள்ளது.. உள்ளே சென்றபோது அதிகமாக துர்நாற்றம் வீசியிருக்கிறது.
இதனால், சந்தேகம் அடைந்து வீட்டின் அறைக்குள் சென்று பார்த்த போது, கார்த்தி நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே கைகளில் ரத்தம் வெளியேறியவாறு பிணமாக கிடந்தார். கார்த்தியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு ஸ்ரீவித்யா கூச்சலிடடார்.
இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீசாருக்கு உடனடியாக அவர் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பிரகாஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். பின்னர், உயிரிழந்த கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2 கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றும் ஊசியை கொண்டு உடலில் இருந்து ரத்தத்தை வெளியேற்றி நூதனமுறையில் கார்த்தி இறந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார்த்தி தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதமும் எழுதி உள்ளார். அதில் அவர் , 'எனது வாழ்க்கை அழகாக முடிவுக்கு வந்தது. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என கூறியுள்ளார், . இந்த சம்பவம் தொடர்பாக, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியின் உறவினர்கள் மற்றும் அவர் வேலை செய்த சென்னை மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் விசாரித்து வருகிறார்கள். ஊசியை கொண்டு உடலில் இருந்து ரத்தத்தை வெளியேற்றி நூதனமுறையில் அரசு டாக்டர் இறந்த சம்பவம் தேனாம்பட்டை ஆழ்வார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை.தற்கொலையை எந்த வகையிலும் ஏற்கவே முடியாத கோழைத்தனம். தற்கொலை செய்யும் மனநிலை வந்தால்உடனே தமிழக அரசின் 104 என்ற எண்ணிற்கு அழையுங்கள். நீங்கள் அழைத்தால் தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடலாம். தற்கொலை தடுப்பு எண்: 104.












Click it and Unblock the Notifications