சென்னை மீனம்பாக்கம் மேம்பாலத்தில் வாகன சோதனை.. நடுரோட்டில் சுருண்டு விழுந்த ஏட்டு.. பெரும் சோகம்
சென்னை: சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் மீனம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். மீனம்பாக்கம் மேம்பாலம் அருகே செவ்வாய்கிழமை அன்று சோதனை சாவடியில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மாரடைப்பால் காலமானார். இது காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்த 59 வயதாகும் ரவிக்குமார் (வயது 59) மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மீனம்பாக்கம் மேம்பாலம் அருகே சோதனை சாவடியில் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது இவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட வாகன ஓட்டிகள் மீனம்பாக்கம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்து மீனம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர் மற்றும் மருத்துவ குழுவினரை வரவழைத்தனர். பரிசோதனை செய்து பார்த்த போது திடீர் மாரடைப்பால் ரவிக்குமார் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரவிக்குமார் உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ரவிக்குமாருக்கு சித்ரா (53) என்ற மனைவியும், விக்னேஷ் (30) என்ற மகனும் இருக்கிறார்கள்.
பார்முலா கார் பந்தயத்துக்காக சென்னை தீவுத்திடல் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போது, கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அன்று கொளத்தூர் உதவி ஆணையர் சிவக்குமார் மாரடைப்பால் காலமானார். கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் கார் பந்தயம் நடைபெறும் பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
அந்த வகையில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்த போலீஸார், சிவக்குமாரை உடனடியாக மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிவக்குமார் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், உதவி ஆணையர் சிவக்குமார் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கார் பந்தயம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் உயிரிழந்த சம்பவம் அப்போது சோகத்தை ஏற்படுத்தியது. இப்போது மீனம்பாக்கத்தில் வாகன சோதனையில் காவலர் உயிரிழந்துள்ளார். வெறும் ஒரு வாரத்தில் இரண்டு காவலர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications