புயல் இல்லை..சென்னையில் கனமழைக்கான காரணம் சொன்ன பாலச்சந்திரன்..2 நாட்களுக்கு நீடிக்குமாம்
சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். காஞ்சிபுரம்,திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் அதி கனமழைக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை பகல் வரை நீடித்தது. கனமழையால் தாழ்வான பகுதிகள் மட்டுல்லாது பிரதான சாலைகளிலும் வெள்ளநீர் தேங்கியது. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் சாலைகளில் வெள்ளநீத் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே இந்த கனமழைக்கான காரணம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், புயல் எதுவும் உருவாகவில்லை என்று கூறினார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்துள்ளதாக பாலச்சந்திரன் கூறினார்.
ஜூன் மாதம் சென்னையில் அதிக மழை பெய்துள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பாலச்சந்திரன், கடந்த 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டு பலத்த மழை பெய்துள்ளதாக கூறினார். கடந்த 1996ஆம் ஆண்டு 285 மிமீ மழை சென்னையில் பதிவானது. இந்த ஆண்டு 158 மிமீ அளவிற்கு மழை பெய்துள்ளதாக கூறினார்.
மீனம்பாக்கத்தில் 16 செமீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தென்பகுதியில் இருந்து வட பகுதியை நோக்கி சென்ற காற்றின் வேகம் கூடியுள்ளது. இதன் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி அது இப்போது மெதுவாக நகர்ந்து கொண்டுள்ளது. மத்திய பகுதியில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற மத்திய பகுதியில் வளிமண்டலத்தில் ஷேர் ஜோன் என்ற பகுதி நிலவுகிறது. இது மெதுவாக வடதிசையில் நகர்ந்து செல்லக்கூடும்.

நுங்கம்பாக்கத்தை பொறுத்தவரை 347 மிமீ மழை 1996ஆம் ஆண்டு பெய்தது. இந்த ஆண்டு 84.7 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழகம், புதுவை காரைக்காலை பொருத்தவரை இயல்பான அளவு 34 மில்லி மீட்டர். பதிவான அளவு 30.5 மில்லி மீட்டர்.
இது இயல்பை விட 11 சதவிகிதம் குறைவாகும்.
சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதுடன் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications